search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீரங்கம் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதம்
    X
    ஸ்ரீரங்கம் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் சேதம்

    ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத கடையில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பிரசாத கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    திருச்சி:

    108 வைண தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனவும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கருடன் சன்னதி அருகே பிரசாத கடை உள்ளது. இதனை ஏலம் எடுத்து ஒருவர் நடத்தி வருகிறார். இந்தகடையில் விற்பனை செய்யப்படும் பிரசாதம் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்நிலையில் கோவிலின் பிரசாத கடையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென கரும்புகை வெளிவந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமள வென எரிந்தது. இதனை கோவிலில் இரவு நேர காவல் பணியில் இருந்த பணியாளர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் அங்கிருந்த தண்ணீரை வாளி மற்றும் குடங்களில் எடுத்து வந்து வேக வேகமாக ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோவில் அதிகாரிகள், ஸ்ரீரங்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தீ விபத்தில் பிரசாத கடை முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. மின் கசிவின் காரணமாக கடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

    இந்த தீயில் பிரசாத கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தன. மேலும் கடையில் இருந்த ரூபாய் நோட்டுகளும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீயில் எரிந்து நாசமான பொருட்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள் என மொத்த சேத மதிப்பு ரூ.5 லட்சம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிரசாத கடையில் தீப்பிடித்து எரியும் காட்சி பதிவாகி உள்ளது. கடையில் எப்படி தீப்பிடித்தது என விசாரிக்கின்றனர். இந்த தீயினால் கடையின் அருகே இருந்த பழங்கால கல் தூண்களில் கரும்புகை படிந்தது. இதற்கிடையில் பிரசாத கடையில் தீப்பிடித்த சம்பவத்தின் காரணமாக கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது.

    கடையை சீரமைத்த பின் பிரசாத விற்பனை ஓரிரு நாளில் தொடங்கும் என கோவில் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். ஸ்ரீரங்கம் கோவில் பிரசாத கடையில் தீப்பிடித்த சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. தீப்பிடித்ததை ஊழியர்கள் பார்த்து உடனடியாக அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் தீ பரவி பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். தீ விபத்து தொடர்பாக ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே தீயை கோவில் ஊழியர்களே அணைத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×