search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
    X
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

    பாலின சமத்துவ போராட்டங்களை முன்னெடுக்க உறுதியேற்போம்- மா.கம்யூ. மகளிர் தின செய்தி

    குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை, போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.
    சென்னை:

    மகளிர் தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:-

    மார்ச் 8ம் தேதி உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் பெண்கள் தினத்துக்கு ஒரு உலகளாவிய போராட்ட வரலாறும், சோஷலிச பாரம்பரியமும் உண்டு.  இந்தப் பெருமிதத்தோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண்கள் தின வாழ்த்துக்களை உலகெங்கிலும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்து போராடும் அத்தனை போராளிகளுக்கும் உரித்தாக்கிக் கொள்கிறது.

    உலகம் முழுவதும் ஜனநாயக உரிமைகளுக்காகவும், மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காகவும் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்தும்  மகத்தான போராட்டங்கள் முத்திரையை பதித்துக் கொண்டுள்ளன. இந்தியாவிலும் பொது வேலை நிறுத்தங்கள், விவசாய/விவசாய தொழிலாளர் போராட்டங்கள், எல்.ஐ.சி., பி.எஸ்.என்.எல். போன்றவற்றில் நடந்த தனியார்மயத்துக்கு எதிரான போராட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம்/என்.பி.ஆர்./என்.ஆர்.சி.க்கு எதிரான போராட்டங்கள், பல்கலைக்கழகங்களில் நடக்கும் போராட்டங்கள் எனப் பலவற்றிலும் பெண்களின் வீரம் செறிந்த பங்கேற்பு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

    ஆட்சியாளர்களின் கொள்கைகளின் விளைவாக வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கான வேலையின்மை, அடிப்படை சுகாதாரக் கேடுகள், ஜி.எஸ்.டி., உயர் பணமதிப்பு நீக்கம், சிறு குறு தொழில் பாதிப்பு, கல்வி/மருத்துவத்தில் தனியார் மயம், அரசின் அடிப்படை சேவைகள் தனியார்மயம், சீரழிந்து வரும் பொது விநியோக முறை போன்றவை ஒரு புறம் தாக்குகின்றன. மறு புறம், ஒரு நாளைக்கு 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் கொடுமை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகள் மீதான வன்முறை 250 சதம் அதிகரிப்பு என்ற நிலைமையும் பெண்கள் மீது பெரும் பாதிப்பை உருவாக்குகிறது.  தலித், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிற்காமல் தொடர்கின்றன. அவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுகின்றன. மாற்றுத்திறனாளி பெண்களும் பாதுகாப்பற்ற சூழலில் தான் வாழ்கின்றனர்.

    ஒன்றுபட்ட போராட்டங்கள் மட்டுமே இன்றுள்ள அவல நிலையில் மாற்றத்தைக் கொண்டு வரும். “ஆணுக்கு பெண் நிகரென்று கொட்டு முரசே”  என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப குடும்பம், சமூகம், ஊடகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான  முயற்சிகளை, போராட்டங்களை   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும். பெண்கள் அமைப்புகளும், தனிநபர்களும் இதற்காக நடத்தும் இயக்கங்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும். சாதி, மதம் கடந்து நின்று, நீதிக்கான போராட்டங்களில் ஈடுபட தமிழகப்பெண்களை, உலகப்பெண்கள் தினத்தன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது.

    இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது செய்தியில் கூறியுள்ளார்.
    Next Story
    ×