search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முரளிதரராவ்
    X
    முரளிதரராவ்

    குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை- முரளிதரராவ் பேச்சு

    குடியுரிமை திருத்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்று நாகர்கோவிலில் நடந்த பா.ஜ.க. பேரணியில் முரளிதரராவ் பேசியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகர்கோவிலில் பாரதீய ஜனதா சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. பார்வதிபுரத்தில் தொடங்கிய இந்த பேரணியை குமரி மாவட்ட பாரதீய ஜனதா தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணியில் பாரதீய ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பேரணி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்ததும் அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்தில் முரளிதரராவ் பேசியதாவது:-

    இந்திய நாட்டின் கடைசி மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் மு.க.ஸ்டாலின் பேரணி நடத்தினாலும் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டை விட்டு போகாது. நாட்டில் வன்முறையை தூண்டிவிட்டு பலரை கொன்று மோடி அரசை வெளியேற்றலாம் என காங்கிரஸ், தி.மு.க.வுடன் சேர்ந்து சில கட்சிகளும், மத தலைவர்களும் நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. 

    மு.க.ஸ்டாலின் முஸ்லீம் லீக் சொல்வதை கேட்டு செயல்படுகிறார். இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், மோடியை சிறந்த தலைவர் என்றும், பாரதீய ஜனதா கட்சி பலம் வாய்ந்த கட்சி என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் பாரதீய ஜனதா கட்சியால் முஸ்லீம்களுக்கு ஆபத்து என்கிறார் மு.க.ஸ்டாலின். பாகிஸ்தான, ஈரான், சிரியா, துருக்கியில் அதிக முஸ்லீம்கள் கொல்லப்படுகிறார்கள். இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இது தான் இந்தியா. 
    முக ஸ்டாலின்.
    தமிழ் என்ற பெயரில் தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. தி.மு.க. இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படும்போது, தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி, டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி. நீங்களா தமிழர்களை காப்பாற்ற போகிறீர்கள். அன்று தமிழர்களை காக்க தைரியம் இல்லை. இப்போது மோடி ஆட்சியில் உலகெங்கும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய வாழ் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில் போராடும் இஸ்லாமிய சகோதரர்களே புரிந்து கொள்ளுங்கள். சில கட்சிகளின் சூழ்ச்சியில் வீழ்ந்து விடாதீர்கள். குடியுரிமை திருத்த சட்டத்தால் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் தான் பயப்பட வேண்டும். இந்திய முஸ்லிம் மக்களுக்கு என்றும் பாரதீய ஜனதா கட்சி பாதுகாப்பாக இருக்கும் என்றார். நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி, முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ், தேவ், முத்துராமன், ராஜன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

    பேரணியில் பங்கேற்றவர்கள் கையில் தேசியக் கொடி ஏந்தியபடி வந்தனர். சிலர் மோடியின் உருவம் கொண்ட முகமூடி அணிந்திருந்தனர். பேரணியையொட்டி நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×