search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க நகை திருட்டு
    X
    தங்க நகை திருட்டு

    பென்னாகரத்தில் 2 வீடுகளில் 49 பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

    பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் பகுதியில் 2 வீடுகளில் 49 பவுன் நகை, ரூ.5 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். 2 இடங்களிலும் கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 44). இவர் மூக்காரெட்டிப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்று விட்டார். மதியம் குமரேசன் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 32 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இதுதொடர்பாக கோபிநாதம்பட்டி போலீசில் குமரேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    பென்னாகரம் அருகே உள்ள கரியம்பட்டியை சேர்ந்தவர் முரளி(44) முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ஜெயசுதா. இவர்கள் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 17 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முரளி பென்னாகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பருவதனஅள்ளியை சேர்ந்தவர் முனுசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி ரஞ்சினி. சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு திருப்பதிக்கு சென்று இருந்தனர். நேற்று இவர்களது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு குறித்து முனுசாமி மற்றும் அவருடைய மனைவி ஆகியோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பிறகு தான் திருட்டு போன நகை, பணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×