search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    சேலம் அருகே தொழிலாளி கொலையில் திடீர் திருப்பம்

    சேலம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக மனைவி மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒருவாபட்டி தென்பொதியான் வளவு பகுதியை சேர்ந்தவர் படவெட்டி (வயது 40). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி நளா (37). இவர்களுக்கு 15 வயதில் பிளஸ்-1 படிக்கும் மகளும், 14 வயதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகளும், 9 வயதில் 4-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை விட்டு பிரிந்து நளா, தனது 3 குழந்தைகளுடன் ஜலகண்டாபுரம் அருகே உள்ள ஆவடத்தூர் ராஜா கோவில் வளவு பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு தனியாக ஒரு வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்- மனைவிக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதனால் படவெட்டி ஆவடத்தூர் வந்து மனைவியுடன் தங்கினார். நேற்று முன்தினம் இரவு படவெட்டி, தலையில் பலத்த காயங்களுடன் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். குழவிக்கல்லை போட்டு அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிகர் முன்னிலையில் ஜலகண்டாபுரம் போலீசார், நளாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது நளா, போலீசாரிடம் கூறுகையில் எனது கணவர் படவெட்டி, மூத்த மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதனால் மூத்த மகள், படவெட்டியின் தலையில் குழவிக்கல்லை போட்டு கொலை செய்தார் என கூறினார்.

    அதன்பேரில், நளாவின் மூத்த மகளிடம் விசாரணை நடத்தினர். அவர், எனது அப்பா, எனக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். இது பற்றி நான் அம்மாவிடம் தெரிவித்தேன். நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்தபோது என்னிடம் அப்பா, தகாத முறையில் நடக்க முயன்றார். இதனால் நான் தான், இந்த கொலையை செய்தேன் என தெரிவித்தார். இருப்பினும் போலீசாருக்கு சந்தேகம் விலகவில்லை. ஒருவரால் இந்த கொலையை செய்திருக்க முடியாது என சந்தேகப்பட்டனர்.

    இதையடுத்து போலீசார், விசாரணை கோணத்தை மாற்றி நடத்தினர். தாய் மற்றும் அவரது 2 மகள்கள், மகன் மற்றும் குடும்பத்தினரை போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது தாயும், மகளும் முரண்பட்ட தகவலை கூறினார்கள். இதனால் மதியம் வரை மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் சொன்னது அனைத்தும் பொய் என்பதும் மாணவி இந்த கொலையை செய்யவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    தாய் நளாவும், அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் ரங்கசாமி (32) என்பவரும் சேர்ந்து படவெட்டியை கொன்று விட்டு, மாணவியை போலீசில் மாட்டி விட முயன்றது தெரியவந்தது.

    மாணவியிடம் உனக்கு கோர்ட்டில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இல்லை. கருணை மற்றும் தற்காப்பு அடிப்படையில் உன்னை விடுதலை செய்து விடுவார்கள். அதனால் இந்த கொலையை நீதான் செய்தாய் என ஒப்புக்கொள் என மூளைசலவை செய்து, 2 பேரும் பணிய வைத்துள்ளனர். இவர்கள் சொல்லி கொடுத்ததை அப்படியே மாணவி போலீசில் சொல்லி உள்ளார்.

    வழக்கில் இருந்து தப்பிக்கவே நளாவும், ரங்கசாமியும், மாணவியின் மனதை மாற்றி இப்படி ஒரு நாடகத்தை அறங்கேற்றி இருக்கிறார்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

    தாய் தனது மகளை சிக்க வைக்க முயன்றதை அறிந்து போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து போலீசார், மாணவியை விடுவித்தனர்.

    பின்னர், போலீசார் இரவோடு இரவாக, ரங்கசாமியை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். படவெட்டியை கொலை செய்தபோது ரத்தம் பீறிட்டு வெளியேறி ரங்கசாமி அணிந்திருந்த துணியில் பட்டது. இந்த துணியை தண்ணீரில் போட்டு ஊற வைத்துள்ளனர். இந்த துணியை போலீசார் கைப்பற்றினர்.

    நளாவின் அக்காள் மகளை திருமணம் செய்துள்ளவர் தான் இந்த ரங்கசாமி. எனவே, நளாவுக்கு மருமகன் முறையாகும்.

    நளாவிடமும், அவரது கள்ளக்காதலன் ரங்கசாமியிடமும் தொடர்ந்து அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×