search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருச்சியில் கோவில் பூசாரி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை

    திருச்சியில் மகன்களுக்கு பெண் கொடுக்க முன்வராததால் கோவில் பூசாரி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்சி:

    திருச்சி ரஞ்சிதபுரம் பழைய பாண்டியன் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54). இவர் திருச்சி சுப்பிரமணியபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் பூஜை செய்யும் வேலையை உதறி விட்டார். பின்னர் தனது மகன்களை அந்த கோவிலின் பூசாரிகளாக நியமித்தார். 

    இந்த நிலையில் ரவிச்சந்திரன் திருமண வயதை தொட்ட தனது இரு மகன்களுக்கும் பெண் பார்த்து வந்தார். ஆனால் மகன்களுக்கு  யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என்று தெரிகிறது. தனது குடிப்பழக்கத்தால் தான் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க இயலவில்லை எனக் கருதிய ரவிச்சந்திரன் தான் செத்தால்தான் தனது மகனுக்கு திருமணம் நடக்கும் என அடிக்கடி வீட்டில் மனவேதனையுடன் கூறி வந்தார். 

    ஆனால் மனைவி, மகன்கள் யாரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. திருமணங்கள் கைகூடினால் எல்லாம் சரியாகி விடும் என நினைத்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரவிச்சந்திரன் இரு சக்கர வாகனத்திற்கு வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி புவனேஸ்வரி மற்றும் மகன்கள் அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுபற்றி கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×