search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கத்தியை காட்டி மிரட்டல்
    X
    கத்தியை காட்டி மிரட்டல்

    திருமங்கலம் அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

    லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது 32). லாரி டிரைவரான இவர் தூத்துக்குடியில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம், வளையங் குளத்துக்கும், எலியார் பத்திக்கும் இடையே உள்ள 4 வழிச் சாலை பகுதியில் அதிகாலையில் லாரியை நிறுத்தி பிரவீன்ராஜ் ஓய்வெடுத்தார்.

    அப்போது முகமூடி அணிந்த கும்பல் அங்கு வந்து பிரவீன்ராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 1,500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் மற்றும் கூடக்கோவில் 4 வழிச்சாலையில் அடிக்கடி லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் ஒரு லாரி டிரைவரிடம் ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றது. கூடக்கோவில் பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்க்கில் புகுந்த முகமூடி கும்பல் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.

    தொடர்ந்து அந்தப்பகுதியில் இரவில் லாரி டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பது நடந்து வருகிறது. ரோந்து போலீசாரின் மெத்தனத்தால் சமூக விரோதிகள் எந்தவித அச்சமுமின்றி கைவரிசை காட்டி வருகின்றனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கடும் நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×