search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    கலவரத்தை கண்டித்த டெல்லி நீதிபதியை மாற்றுவதா?- கே.எஸ்.அழகிரி கண்டனம்

    டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி மோதலை உருவாக்கி, குளிர்காய நினைத்த பா.ஜ.க.வின் பதுங்கு திட்டங்கள் தலைநகர் டெல்லியில் அம்பலமாகியுள்ளன. வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த நான்கு நாட்களாக நீடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்திருக்கிறது. 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    டெல்லி கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி டெல்லி போலீசாருக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் உள்ளிட்ட அமர்வு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.

    இதுகுறித்த வழக்கை நேற்றுமுன்தினம் இரவு 12.30 மணிக்கு விசாரித்த நீதிபதிகள், டெல்லி போலீஸ் சார்பாக ஆஜரான துஷார் மேத்தாவிடம் கேட்ட போது, தான் அந்த வீடியோ காட்சியை பார்க்கவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழக்கறிஞராக உள்ள துஷார் மேத்தாவை நீதிபதிகள் கடுமையான கண்டித்துள்ளனர். உங்களைப் போன்றவர்களின் பொறுப்பற்ற போக்கு தான் தலைநகர் டெல்லியில் நடந்த கலவரத்தை தூண்டியதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என்று கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் வெளிப்படுத்தினர்.

    டெல்லி வன்முறை வெறியாட்டத்தை தடுக்கத் தவறிய காவல்துறை மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்ததற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இரவோடு இரவாக பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு நேற்றே இடமாற்றம் செய்யப்பட்டார்.

    நீதிபதி முரளிதர்


    மத்திய பா.ஜ.க. அரசு அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட நீதிமன்றம், தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வுத்துறை போன்ற அனைத்து நிறுவனங்களையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது நீதிமன்றத்தை அச்சுறுத்தி, அச்சத்தில் ஆழ்த்தி வருகிற செயலில் ஈடுபட்டிருப்பதை விட ஜனநாயக, சட்டவிரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

    இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை பாதுகாக்கிற ஒரே அமைப்பாக இருக்கிற நீதிமன்றங்களும் மிகப்பெரிய தாக்குதலுக்கும், அச்சுறுத்தலுக்கும் நரேந்திர மோடி , அமித்ஷா கூட்டணியின் அதிகார அத்துமீறலால் பலியாகி வருகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற செயற்குழுவில் டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    தங்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக ஜனநாயக வழியில், அமைதியாக பெருந்திரளாக போராடிக் கொண்டிருக்கிறவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப்பட்டு, 27 பேர் உயிரிழப்பு நிகழ்ந்ததற்கு முழு பொறுப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.

    எனவே, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் இடமாற்றம் என்பது நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை எதிர்கொண்டு முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.

    முதற்கட்டமாக டெல்லியில் நடந்த வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×