search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மதுரையில் சிறுமிகளின் ஆபாச படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பியவர் கைது

    மதுரையில் சிறுமிகளின் ஆபாச படங்களை வாட்ஸ் அப்பில் பரப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    தமிழகம் முழுவதும் சிறுமிகளின் ஆபாச படத்தை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்து பரப்புபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாநகர ஆட் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புகார் மனு தாக்கல் செய்தனர்.

    அதில் ஆரப்பாளையத்தை சேர்ந்த சிலர் சிறுமியின் ஆபாச படத்தை டவுன் லோடு செய்து சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதன் அடிப்படையில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரப்பாளையத்தில் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆரப்பாளையத்தை சேர்ந்த குமார் (வயது 40) என்பவர் செல்போன் மூலம் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைத் தளங்களில் பரப்புவது தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேலமாசி வீதியில் உள்ள லாரி புக்கிங் கம்பெனியில் குமார் வேலை பார்ப்பதும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

    குமாரிடம் இருந்து செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அவர் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து குமாரை கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தமிழகத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக மதுரையில் சிறுமிகளின் ஆபாச படத்தை டவுன்லோடு செய்து மற்றவர்களுக்கும் வாட்ஸ்அப் மூலம் பரப்பியதாக ஆரப்பாளையம் குமார் முதல் நபராக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×