search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி கொலை
    X
    விவசாயி கொலை

    ஓசூரில் தந்தையை தாக்கியதால் விவசாயியை கொன்ற வாலிபர்

    ஓசூரில் தந்தையை தாக்கியதால் விவசாயியை கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேடரபள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது40) விவசாயி. இவருக்கு திருமணமாகி சந்திலேகா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    இவர் நேற்று இரவு அண்ணா நகரில் உள்ள ஒரு கோவில் முன்பு தனது நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கத்தியால், கிருஷ்ணனை கழுத்தில் வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த மர்ம நபர் கத்தியை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதைகண்ட அவரது நண்பர்கள் உடனடியாக கிருஷ்ணனை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த அபிலேஷ் (27) என்பவரின் தந்தையை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கிருஷ்ணனுக்கும், அபிலேசுக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கோவில் முன்பு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணனை அங்கு வந்த அபிலேஷ் முதலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். அப்போது அவருடன் அவரது நண்பர் சதீஸ் என்ற வாலிபரும் உடன் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் 2 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×