search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் பறிப்பு
    X
    பணம் பறிப்பு

    திருமங்கலம் அருகே பெட்ரோல் பங்க்கில் முகமூடி கொள்ளையர்கள் பணம் பறிப்பு

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களை கத்திமுனையில் தாக்கி முகமூடி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்துக்குட்பட்ட எலியார்பத்தியில் சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

    இங்கு இரவு பணியில் இருந்த ஊழியர்கள் வினோத் குமார் (வயது22), முத்துப் பாண்டி (35), செல்வம் (57) ஆகியோர் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் அவர்களை யாரோ தட்டி எழுப்பினர்.

    ஊழியர்கள் கண் விழித்து பார்த்தபோது சுமார் 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் அங்கு நின்றனர். அவர்கள் தங்கள் முகத்தை துண்டால் கட்டி முகமூடி அணிந்திருந்தனர்.

    கைலி, சட்டை அணிந்திருந்த 3 பேரும் கையில் வாள், அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். அவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி பணம் இருக்கும் இடத்தை காட்டுமாறு கூறினர். ஊழியர்கள் காட்ட மறுத்ததால் அவர்களை தாக்கினர்.

    தொடர்ந்து அங்கிருந்த அறைக்கு சென்ற முகமூடி கொள்ளையர்கள் பணப்பெட்டியில் இருந்த ரூ.6 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். மேலும் பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவு டிஸ்கையும் உடைத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் பங்க்கில் வைக்கப்பட்டு இருந்த வேறு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×