search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்த பேராசிரியர்

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் கழிவறை துளை வழியாக மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர்.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்கள் அனைத்திலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே கழிவறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இரவில் ஆய்வகத்தில் செய்முறை பயிற்சியில் இருந்த மாணவி ஒருவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது திடீரென கழிவறைக்குள் சிறிய அளவிலான வெளிச்சம் தென்பட்டது. அந்த பகுதியை பார்த்த மாணவி கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போது கழிவறையின் வெளியில் இருந்து தண்ணீர் குழாயையொட்டி இருந்த சிறிய துளை வழியாக செல்போனில் ஒருவர் வீடியோ எடுப்பது தெரிந்தது.

    இதையடுத்து மாணவி கூச்சல் போட்டார். மற்ற மாணவிகளும் ஓடிவந்தனர். செல்போனில் படம் பிடித்த வாலிபர் யார்? என்று பார்த்த போது அவர் ஐ.ஐ.டி.யில் பணியாற்றும் பேராசிரியர் சுபம் பானர்ஜி என்பது தெரிய வந்தது.

    இந்த வி‌ஷயம் ஐ.ஐ.டி. வளாகத்தில் காட்டு தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பேராசிரியர் சுபம் பானர்ஜியின் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் மாணவியின் ஆபாச வீடியோ இருந்தது. உடனடியாக இதுபற்றி கோட்டூர்புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். பேராசிரியர் சுபம் பானர்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    பேராசிரியர் சுபம் பானர்ஜி இதுபோன்று பல மாதங்களாகவே ஆய்வக கழிவறையில் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து ரசித்து வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது செல்போனை வாங்கி போலீசார் பரிசோதித்து பார்த்தனர்.

    ஆனால் வீடியோக்கள் அழிக்கப்பட்டு இருந்தது. இதனால் தடயவியல் சோதனைக்கு சுபம் பானர்ஜியின் செல்போனை அனுப்பி வைத்துள்ளனர்.

    செல்போனில் அழிக்கப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களை ரெக்கவரி சாப்ட்வேர் மூலமாக கண்டுபிடிக்க முடியும் என்பதால் அதற்கான முயற்சிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    தடயவியல் சோதனையில் மாணவிகளின் வீடியோக்கள் சிக்கினால் இந்த வழக்குக்கு முக்கிய ஆதாரமாக பயன்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் ஐ.ஐ.டி. மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பேராசிரியர் சுபம் பானர்ஜி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஆண்டு பணியில் சேர்ந்த இவர் ஏரோஸ்பேஸ் துறையில் இணை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    திருமணமாகாத அவர் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியிலேயே தங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆய்வகத்தில் மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போதுதான் இதுபோன்ற இழிவான செயலில் சுபம் பானர்ஜி ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×