search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி தற்கொலை
    X
    மாணவி தற்கொலை

    சின்னசேலம் அருகே மாயமான மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

    சின்னசேலம் அருகே மாயமான மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சின்னசேலம்:

    சின்னசேலம் அருகே மாயமான மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தாய் கண்டித்ததால் நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி பழைய காலனியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மகள் தீபிகா(வயது 14). எலவடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 14-ந்தேதி பள்ளிக்கு சென்றபோது வீட்டின் அருகே உள்ள மாணவர் ஒருவரிடம் தேர்வு எழுதுவதற்காக (பேடு) அட்டையை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் தாய் சுமதி தனது மகளிடம் ஏன் அடுத்தவரிடம் பேடு வாங்கிச் செல்கிறாய்? என கேட்டு, அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாயமான மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் குழந்தைவேல் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மூங்கில்பாடியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் தீபிகா பிணமாக மிதந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அதேஊரை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் சிலர் இதுபற்றி குழந்தைவேல் குடும்பத்தினருக்கும், சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் மற்றும் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் மிதந்த தீபிகாவின் உடலை மீட்டனர். இதனிடையே அங்கு வந்த குழந்தைவேல் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தீபிகாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வு எழுதுவதற்காக பக்கத்து வீட்டை சேர்ந்த மாணவர் ஒருவரிடம் பேடு வாங்கிச் சென்றதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி வீட்டை விட்டு வெளியேறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×