search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆண்டிப்பட்டி அருகே கணவனை அடித்து கொன்ற மனைவி கைது

    ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் டார்ச்சர் செய்த கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சேர்மலை(55). டிராக்டர் ஓட்டுனரான இவருக்கு சுருளியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    2 மகன்களும் வெளியூரில் ஜே.சி.பி ஆப்ரேட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். மகள் காதல் திருமணம் செய்து சின்னமனூர் அருகில் உள்ள கன்னிசேர்வைபட்டியில் உள்ளார். சேர்மலையும், அவரது மனைவி மட்டும் கடமலைக்குண்டுவில் தனியாக வசித்து வந்தனர்.

    சேர்மலை தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சுருளியம்மாள் கணவரை அடித்தார். இதில் சேர்மலை மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சேர்மலையை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேர்மலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுருளியம்மாளை கடமலைக்குண்டு போலீசார் கைது செய்தனர்.


    Next Story
    ×