search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் மெகராஜ் வெளியிட்டபோது எடுத்தபடம்.
    X
    இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் மெகராஜ் வெளியிட்டபோது எடுத்தபடம்.

    மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 6 சட்டமன்ற தொகுதிகளில் 14.25 லட்சம் வாக்காளர்கள்

    நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் 14 லட்சத்து 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் கடந்த 23.12.2019 முதல் 22.1.2020 வரை பொதுமக்களிடம் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதோடு, அதில் நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலானது அரசியல் கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. கலெக்டர் மெகராஜ் பட்டியலை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் அதை பெற்றுக்கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, உதவி கலெக்டர்கள் கோட்டைக்குமார், மணிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தேர்தல் தாசில்தார் சுப்பிரமணியம், நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    இதுகுறித்து கலெக்டர் மெகராஜ் கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் 23.12.2019 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 13 லட்சத்து 97 ஆயிரத்து 730 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வாக்காளர் பட்டியலில் புதிதாக 32 ஆயிரத்து 213 பேர் சேர்க்கப்பட்டும், 4,496 பேர் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.

    தற்போது வெளியிடப்பட்டு உள்ள இறுதி வாக்காளர் பட்டியலின்படி நாமக்கல் மாவட்டத்தில் 6 லட்சத்து 95 ஆயிரத்து 840 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 29 ஆயிரத்து 469 பெண் வாக்காளர்களும், 138 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 447 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண்கள் வாக்காளர்கள் 33 ஆயிரத்து 629 பேர் அதிகம் உள்ளனர்.

    18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசு சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், தகுதியான வாக்காளர்கள் சிலர் இன்னமும், பட்டியலில் தங்களை சேர்த்துக் கொள்ள முன்வராதது வேதனை அளிக்கிறது. அதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் ஆண்களுக்கு இருப்பதில்லை. இதற்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் கூட நீக்கம், திருத்தம் சம்பந்தமான மனுக்களே அதிகமாக வந்து உள்ளன. அரசியல் கட்சியினர் அவரவர் பகுதிகளில் உள்ள தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாக வார்டு வாரியாக, தெரு வாரியாக இருக்கும் கட்சியினர் தகுதியான வாக்காளர்கள் யாரேனும் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதை அறிந்தால் உடனடியாக அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் பேசினார். ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 5,628 பேரும், சேந்தமங்கலம் தொகுதியில் 5,596 பேரும், நாமக்கல் தொகுதியில் 6,053 பேரும், பரமத்திவேலூர் தொகுதியில் 5,049 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 4,915 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 4,972 பேரும் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×