search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வத்தலக்குண்டுவில் ராணுவ வீரர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு

    வத்தலக்குண்டுவில் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு திருநகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவி புஷ்பராணி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன், இந்திய ராணுவத்தில் பணிபுரிகிறார்.

    வத்தலக்குண்டுவில் ஒரு மகளும், இன்னொரு மகள் கோவையிலும் வசித்து வருகின்றனர். வத்தலக்குண்டு திருநகரில் உள்ள வீட்டில் புஷ்பராணி மட்டும் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு, கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு புஷ்பராணி சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புற சுற்றுச்சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்தனர்.

    பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பிறகு பீரோவில் இருந்த 20 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் கதவு திறந்திருப்பதை கண்டு, அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். மேலும் கோவையில் இருந்து புஷ்பராணி வரவழைக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் களை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் ஆக்சா பிளேடு, சுத்தியல் ஆகியவற்றை மர்ம நபர்கள் விட்டு சென்றனர். அதனை துருப்புச்சீட்டாக வைத்து போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×