search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 2 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைதான 2 பேரை படத்தில் காணலாம்.

    மத்தூர் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை: பிரபல கொள்ளையன் உள்பட 2 பேர் கைது

    மத்தூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள மஜீத் கொல்ல அள்ளி பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது55), விவசாயியான இவர் கடந்த மாதம் 24-ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். அப்போது மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 8 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து பச்சையப்பன் மத்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

    இதையடுத்து நேற்று இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மத்தூர்-திருப்பத்தூர் சாலைஅங்கம்பட்டி என்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள மல்லாபுரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் திருப்பதி (27), அவரது உறவினரான சேக்காண்டஅள்ளியை சேர்ந்த சபரி (35) என்பது தெரியவந்தது. மேலும் திருப்பதி மீது கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், அரூர், மொரப்பூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளும் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் 2 பேர் பச்சையப்பன் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×