search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்
    X
    முளைப்பாரி சுமந்து வந்த பெண்கள்

    லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்- நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

    கோவை லிங்கபைரவியில் தைப்பூசத் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் தேவியை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
    கோவை: 

    பெண் தன்மையின் தெய்வீக அம்சமான லிங்கபைரவியில் நவராத்திரி மற்றும் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு தைப்பூசத் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் கள்ளிப்பாளையத்தில் இருந்து முளைப்பாரி சுமந்து வந்தனர். அதனுடன், முளைப்பாரியிலேயே லிங்கபைரவி தேவியின் உருவம் வடிவமைக்கப்பட்டு, தேரில் வைத்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். 

    காலை 6 மணிக்கு கள்ளிப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நண்பகல் 12 மணியளவில் லிங்கபைரவியை வந்தடைந்தது. வரும் வழியில் ஆலந்துறை, மத்வராயபுரம், இருட்டுப்பள்ளம், காந்தி காலனி, செம்மேடு, முட்டத்துவயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அங்குள்ள கிராம மக்கள் ஊர்வலத்தை வரவேற்று தேவியின் அருளை பெற்றனர்.

    முளைப்பாரி எடுத்து வந்த பெண்கள்

    இதுதவிர, தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த 21 நாட்கள் சிவாங்கா விரதம் மேற்கொண்டனர். அவர்கள் அனைவரும் இன்று லிங்கபைரவிக்கு வந்து தேங்காய், தானியங்கள், எள் உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து தங்களது விரதத்தை நிறைவு செய்தனர். நூற்றுக்கணக்கானோர் மாவிளக்கு ஏற்றியும் அர்ப்பணிப்பு செலுத்தினர். 

    மாலை 5.40 மணி முதல் 6.40 மணி வரை லிங்கபைரவியில் பெளர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேவியின் உற்சவ மூர்த்தி 7 மணியளவில் நந்தி முன்பாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, நெருப்பு நடனத்துடன் கூடிய மஹா ஆரத்தியும் நடைபெறும். இரவு 8 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.
    Next Story
    ×