search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காரியாபட்டியில் கணவன்-மனைவி தகராறில் 11 மாத ஆண் குழந்தை கொலை?

    தண்ணீர் தொட்டியில் 11 மாத ஆண் குழந்தை பிணமாக மிதந்தது. குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மனைவி சுஷ்மிதா. இவர்களுக்கு விகாஷ் என்ற 11 மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு சுஷ்மிதா வெளியே சென்றிருந்தார். சிறிது நேரத்தில் அவர் வீடு திரும்பினார். அப்போது குழந்தையை காணவில்லை. வீடு முழுவதும் தேடி பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் விகாஷ் பிணமாக மிதந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுஷ்மிதா கதறி அழுதார்.

    தகவல் அறிந்த காரியாப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விளையாடும்போது தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சுஷ்மிதாவின் உறவினர்கள் குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    சுஷ்மிதா 2018-ம் ஆண்டு காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து கொண்டிருந்தபோது அமல் ராஜூடன் தொடர்பு இருந்துள்ளது. இதில் சுஷ்மிதா கர்ப்பமானார். 7 மாத கர்ப்பிணியாக இருந்தது பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவரவே பள்ளியில் இருந்து வெளியே அனுப்பி விட்டனர்.

    பின்னர் சுஷ்மிதா- அமல்ராஜ் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் சுஷ்மிதாவுக்கு 11 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

    அமல்ராஜ் மனைவியிடம் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்று தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையில் குழந்தை பிறந்து 7 மாதங்களாகியும் அமல்ராஜ் மற்றும் அவரது பெற்றோர் குழந்தையை பார்க்க வரவில்லை என்று அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுஷ்மிதா ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சினை வர சுஷ்மிதாவின் தந்தை மதுரை சரக டி.ஐ.ஜி.யிடம் புகார் மனு அளித்தார். இதன்பேரில் நடந்த விசாரணைக்கு பின்னர் தைப் பொங்கலை முன்னிட்டு சுஷ்மிதா, அமல்ராஜ் வீட்டிற்கு சென்று உள்ளார்.

    இருப்பினும் அமல்ராஜ் பெற்றோர் லூகாஸ்-விமலா குழந்தையை தொட்டு கூட பார்க்கவில்லை என்றும், குழந்தை இருப்பது தனக்கு மிகவும் இடைஞ்சலாக இருப்பதாக அமல்ராஜ் கூறியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில்தான் குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அமல்ராஜ் தான் குழந்தையை தண்ணீரில் போட்டு கொலை செய்திருக்கலாம் என்று சுஸ்மிதாவின் தந்தை சூசைமாணிக்கம் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இது சம்பந்தமாக காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தை உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×