search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X
    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    குரூப்-2ஏ தேர்விலும் ஓடும் வேனில் விடைத்தாள் திருத்தப்பட்டது அம்பலம்

    குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசின் 41 துறைகளில் காலியாக இருந்த 1,953 பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2ஏ தேர்வு நடத்தியது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நடந்த அந்த தேர்வில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 56 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த 2018-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் இப்போது 41 துறைகளில் பல்வேறு பணியிடங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் குரூப்-4 தேர்வில் மோசடி நடந்து இருப்பது தெரிய வந்தது. அதுபற்றி விசாரணை நடத்தியபோது குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் குரூப்-2ஏ தேர்வில் 42 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்ததாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காஞ்சிபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் வடிவு, சென்னை பட்டினப்பாக்கம் பதிவு துறை தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஞானசம்பந்தம், செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் ஆனந்தன் ஆகியோர் கைதானார்கள்.

    இவர்கள் தேர்ச்சி பெற உதவி செய்ததாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள விஜயாபதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் கைதானார். இவர் தனது மனைவி மகாலட்சுமியையும் முறைகேடு செய்து குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    குரூப்-4 தேர்வில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் போலீஸ்காரர் சித்தாண்டி ஆகியோருக்கும் குரூப்-2ஏ தேர்வில் பங்களிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணம் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

    மொத்தத்தில் குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த மோசடி தொடர்பாக இதுவரை 25 பேர் கைதாகி இருக்கிறார்கள். முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சிக்கினால் எப்படி முறைகேடு நடந்தது? எத்தனை பேரிடம் முறைகேடு நடந்தது? என்பன போன்ற விவரங்கள் தெரிய வரும்.

    இந்த நிலையில் குரூப்-4 தேர்வு மோசடி நடந்தது போன்றே குரூப்-2ஏ தேர்விலும் மோசடி நடந்து இருப்பது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக குரூப்-4 விடைத்தாள்கள் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டது போன்றே குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்களும் ஓடும் வாகனத்தில் திருத்தப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

    குரூப்-2ஏ தேர்வு எழுதியவர்களில் 42 பேரின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 33 பேரை தேடி வருகிறோம்.

    கைது

    குரூப்-2ஏ தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டதில் முகப்பேர் ஜெயக்குமார்தான் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் பணம் வாங்கியவர்களிடம் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுத அறிவுறுத்தி உள்ளார்.

    ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வேனில் கொண்டு வரப்பட்டபோது மற்றொரு வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த ஜெயக்குமார் அரசு பணியாளர் தேர்வு வாரிய ஊழியர்கள் உதவியுடன் விடைத்தாள்களை பெற்று திருத்தம் செய்துள்ளார்.

    பணம் வாங்கியவர்களிடம் அழியும் மையினால் தேர்வு எழுதுமாறு குரூப்-4 தேர்வு எழுதியவர்களிடம் ஜெயக்குமார் கூறி இருந்தார். ஆனால் குரூப்-2ஏ தேர்வின்போது அவர் வேறு விதமான மோசடியை அரங்கேற்றி இருந்தார்.

    அதாவது தெரிந்த விடைகளுக்கு மட்டும் பதில் எழுதும்படி கூறியிருந்தார். மற்ற இடத்தை அப்படியே விட்டுவிடும்படி தெரிவித்து இருந்தார். அப்படி வெறுமனே விடப்பட்ட இடங்களில் ஜெயக்குமார் பதில் எழுதி நிரப்பியுள்ளார்.

    அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் பலர் உதவியாக இருந்துள்ளனர்.

    குரூப்-4 தேர்விலும், குரூப்-2ஏ தேர்விலும் அனைத்து தில்லுமுல்லுகளையும் ஜெயக்குமார் தலைமையிலான கும்பல்தான் செய்துள்ளது. அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன. இடைத்தரகர்களாக இருந்தவர்களுடன் ஜெயக்குமார் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

    அவன் தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். அவனது வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

    ஜெயக்குமாரை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைத்துள்ளோம். அவன் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்தபடி உள்ளான். அந்த தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

    விரைவில் ஜெயக்குமார் பிடிபடுவான். அப்போது அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தும் முழுமையாக தெரிய வரும்.

    இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×