search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.
    X
    கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த போது எடுத்தபடம்.

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்- முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கும் பணியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

    இதற்காக ஒவ்வொரு ஊர்களிலும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று நிர்வாகிகள் கையெழுத்து வாங்கினார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு சென்று திரு.வி.க. நகரில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவர் தனது கையெழுத்தை போட்டதும் மற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் வரிசையாக கையெழுத்திட்டனர்.

    அதன்பிறகு மு.க.ஸ்டாலின் வீதி, வீதியாக நடந்து சென்று பொது மக்களிடம் கையெழுத்து பெற்றார். மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற வருவதையறிந்த ஏராளமான பொதுமக்கள் திரளாக வந்து கையெழுத்திட்டனர்.

    இதேபோல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ துறைமுகத்திலும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு சைதாப்பேட்டையிலும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    வைகோ

    சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி பகுதிகளில் சென்னை தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்.

    இதில் பகுதி செயலாளர்கள் மதன்மோகன், ஏ.ஆர்.பி.எம். காமராஜ், பகுதி துணை செயலாளர் சிதம்பரம், பாலச்சந்தர் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்.எல்.ஏ. செங்கல்பட்டில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 25 இடங்களுக்கு சென்று கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக பேசினார்.

    அஸ்தினாபுரம் பஸ்நிலையம் அருகே பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர்.

    இந்த கையெழுத்து இயக்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரம், ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகளில் நடைபெற்று வருகிறது. இந்த கையெழுத்து இயக்கம் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    1 கோடி கையழுத்து வரை பெறப்பட்டதும் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினரும் ஜனாதிபதியை சந்தித்து கையெழுத்து படிவங்களை வழங்க உள்ளனர்.

    Next Story
    ×