search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் வங்கிகள் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் வங்கிகள் மூடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

    கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தால், வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதனால் வாடிக்கையாளர்களின் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது.
    பெரம்பலூர்:

    வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை முறையாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று மற்றும் இன்று (சனிக்கிழமை) அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஏற்கனவே தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு சில தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 57 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஊழியர்கள் பணியில் இல்லாததால், வங்கிகள் மூடப்பட்ட நிலையில் காட்சியளித்தது. இதேபோல் ஒரு சில தனியார் வங்கிகளும் மூடப்பட்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வங்கிகளில் எந்தவித பண பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டது.

    மாத கடைசி நாளான நேற்று வங்கிகளுக்கு நேரில் வந்து பணம் பரிவர்த்தனை செய்யும் பொதுமக்களும், வியாபாரிகளும் பரிவர்த்தனை செய்ய முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். ஆனால் அவர்களில் பலர் ஏ.டி.எம். மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் மூலம் பணம் எடுத்து கொண்டதும், பணம் போடும் எந்திரம் மூலம் பணம் பரிவர்த்தனை செய்ததை காணமுடிந்தது. இதனால் அங்கு அந்தந்த வங்கி வாடிக்கையாளர்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் சில ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று மட்டும் வங்கிகளில் சுமார் ரூ.20 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இன்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை நாள் ஆகும். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தான் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று வங்கியில் வேலை பார்க்கும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×