search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருவண்ணாமலை என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்? - தனிவார்டில் வைத்து கண்காணிப்பு

    திருவண்ணாமலை என்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தனிவார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பினால் பலர் இறந்துள்ளனர். ஏராளமானோர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநோய் உலகளவில் மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதையொட்டி இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீனாவில் இருந்து இந்தியா வரும் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மாநில அரசுகளும் தீவிர சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கேரளாவை சேர்ந்த மாணவி ஒருவருக்கு இந்த வைரஸ் நோய் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அம்மாநில அரசு அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

    சீனாவில் படித்து வரும் திருவண்ணாமலையை சேர்ந்த 5 மாணவர்கள் ஊர் திரும்பினர். அவர்களை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    மாணவர்களை தவிர வேலை பார்ப்பவர்கள், சுற்றுலா சென்றவர்களும் பலர் திருவண்ணாமலைக்கு திரும்பி வருவதால் அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனாவில் பணியாற்றி வரும் திருவண்ணாமலையை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் கடந்த 19-ந் தேதி திருவண்ணாமலைக்கு வந்தார். அவருக்கு தும்மல் ஏற்பட்டது. அவருக்கு கொரோனா வைரஸ் இருக்கலாம் என அஞ்சப்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவரை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும் அவர் தனி வார்டில் வைத்து டாக்டர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக டாக்டர் கலைச்செழியன் கூறியதாவது:-

    என்ஜினீயர் கடந்த 19-ந் தேதி இந்தியா வந்துள்ளார். அதன் பின்பு தான் சீனா நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் அதிகரித்தது. மேலும் அங்கு நோய் பரவி வரும் பகுதியில் இருந்து சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் தான் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவருக்கு நோய் வந்திருக்க வாய்ப்பில்லை.

    இந்தியா வந்த அவரிடம் சுகாதாரத்துறையினர் உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவ உதவி மையத்தை அழைத்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதன்படி 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு தும்மல் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் மருத்துவ உதவி மையத்தை நாடினார். அவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு கூறினர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அவரை தனி வார்ட்டில் வைத்துள்ளோம். அவருக்கு அந்த நோய் தாக்குதல் இல்லை. அவர் நலமுடன் இருக்கிறார். எனினும் அவரது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×