search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி
    X
    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி

    பாக்கெட் இன்றி எண்ணெய் விற்கும் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை - தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை

    வருகிற ஜுன் மாதம் முதல் பாக்கெட் இன்றி எண்ணெய் விற்கும் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உப்பு, பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் தாவர எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கான உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக அரசால் 1.6.2020 முதல் பாக்கெட் அல்லாமல் எண்ணெய் விற்கும் உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எண்ணெய் உற்பத்தியாளர்கள் தாங்கள் தயார் செய்யும் எண்ணெய் பாக்கெட் மீது கண்டிப்பாக லேபிள் ஒட்டியிருக்க வேண்டும். இந்த லேபிளில் உற்பத்தியாளர்கள் விவரம் மற்றும் காலாவதியாகும் நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் ஒட்டியிருக்க வேண்டும்.

    சீனியுடன் கருப்புக்கட்டி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை கலந்து விற்பனை செய்ய அனுமதி உண்டு. இதற்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளை கண்டிப்பாக உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். கருப்புக்கட்டியில் எத்தனை சதவீதம் சீனி சேர்க்கலாம் என்ற விவரம் நுகர்வோர்களுக்கு லேபிள் மூலம் தெரிவிக்க வேண்டும். பாக்கெட் இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது.

    உப்பு உற்பத்தியாளர்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அயோடின் அளவினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அயோடின் கலப்பு அல்லாத உப்புகளை விற்பனை செய்வதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. பிற பயன்பாட்டுக்கு அயோடின் சேர்க்கப்படாத உப்புகளை 2 கிலோ பாக்கெட்களாக விற்க அனுமதிக்கப்படுகிறது.

    ஆனால் 1.7.2020 முதல் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்வதை கண்காணித்து சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே உப்பு உற்பத்தியாளர்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் உப்பு, பனைவெல்லம், பனங்கற்கண்டு, தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×