search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - கேஎஸ் அழகிரி வலியுறுத்தல்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் நிர்வாகம் எத்தகைய சீர்கேடான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து வெளிவருகிற செய்திகளே தகுந்த சான்றுகளாக அமைந்திருக்கின்றன.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செப்டம்பர் 2019-ல் நடத்திய எழுத்துத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்தது அம்பலமாகி, அதில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் நிரந்தர தகுதி நீக்கம் செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

    முறைகேட்டில் தொடர்புடைய இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    விசாரணைகள் முடியாதிருக்கும் நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய தேர்வுகளில் வேறு எந்த மையத்திலும் முறைகேடு நடக்கவில்லை என்று அவசர அவசரமாகக் கூறியது பலத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. இத்தகைய முறைகேடுகளை மேலிடத்தின் ஆதரவில்லாமல் இடைத்தரகர்களால் நிச்சயம் செய்ய முடியாது.

    தேர்வு முறைகேடுகளுக்கான விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களோடு இப்பிரச்சினை முடிந்து விடக்கூடியதல்ல. இது 16 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இடைத்தரகர்கள் மற்றும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் உதவியுடன் அழியும் மையால் தேர்வு எழுதி, பிறகு வேறு ஒரு மை மூலம் அதையே திருத்தி எழுதும் வகையில் இந்த முறைகேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அதிர்ச்சியை தரக்கூடியதாக உள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மோசடி வெளிவந்துள்ள இந்தநிலையில், தமிழக அரசின் போக்குவரத்துத்துறையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு 33 பேரை தேர்வு செய்து வெளியிட்ட பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து ஆணையிட்டுள்ளது.

    கோப்பு படம்

    தமிழக போக்குவரத்துத் துறையில் 113 மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கு, கடந்த 2018-ல் தேர்வு நடைபெற்றது. இதில், வெறும் 33 பேரை மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைத்து டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தான் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    2018-ம் ஆண்டில் கலந்து கொண்ட 1328 பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பின்னணியில் டி.என்.பி.எஸ்.சி. தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது. டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிற தேர்வுகள் நேர்மையாக நடைபெறாது என்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. மீது படிந்திருக்கிற அழியாத கறையை துடைக்க வேண்டுமானால், தமிழக ஆட்சி யாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. விசாரணையினால் உண்மைகள் வெளிவராது.

    டி.என்.பி.எஸ்.சி.யை காப்பாற்றுகிற முயற்சியில் தான் தமிழக ஆட்சியாளர்கள் மறைமுகமாக செயல்படுவார்கள். எனவே, தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் வெளிவந்திருக்கின்றன.

    எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த அனைத்து முறைகேடுகள் குறித்தும் பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணையை மத்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ.) மூலம் விசாரிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் உண்மையான குற்ற வாளிகளை கண்டுபிடிக்கிற வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×