search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய அரசு பஸ்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
    X
    புதிய அரசு பஸ்களை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    தமிழகம் முழுவதும் 240 புதிய அரசு பஸ்கள் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

    சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்படும் 240 புதிய பஸ்களை இன்று தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 10 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 35 பேருந்துகளும், மதுரை அரசுபோக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும் இதில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.83 கோடியே 83 லட்சம் ஆகும்.

    மோட்டார் வாகனப் பராமரிப்புத்துறை சார்பில் முதற்கட்டமாக, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.



    மேலும், மண்ணச்சநல்லூரில் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் உதகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றையும் அவர் திறந்துவைத்தார்.

    உடனடியாகப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், செல்லிடைப் பேசி தனிச்செயலி வழி முன்பதிவு செய்யும் திட்டத்தையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசு தாரர்களில், 36 வாரிசு தாரர்களுக்கு ஓட்டுநனராகவும் 188 வாரிசு தாரர்களுக்கு நடத்துனராகவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

    அரசு போக்குவரத்து கழகங்களில் 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை பணி நியமனம் செய்யப்பட்ட 1,828 சேம ஓட்டுநர்கள் மற்றும் 537 சேம நடத்துனர்களில், தகுதி பெற்ற 1,112 ஓட்டுநர்கள் மற்றும் 162 நடத்துனர்களுக்கு தினக்கூலி ஓட்டுநர் மற்றும் தினக்கூலி நடத்துனர்களாக பதவி மாற்றம் செய்வதற்கான ஆணைகளையும் அவர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், உயர் அதிகாரிகள் சந்தரமோகன், இளங்கோவன், கணேசன், செந்தில்வேலன் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×