search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றப்படாது- அமைச்சர் ஜெயக்குமார்

    அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டாலும் பெயர் மாற்றப்படாது என்றும் அண்ணா பெயரிலேயே இயங்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை உயர்கல்வி நிறுவனமாகவும், மற்றொன்றை பல்கலைக்கழகமாகவும் மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து நிர்வகிப்பது குறித்தும், இதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் அய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தியது.

    அண்ணா பல்கலைக்கழகம்

    இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படாது என்றும், அண்ணா பெயரிலேயே தொடர்ந்து இயங்கும் என்றும் கூறினார்.

    மேலும், பல்கலைக்கழகத்தை பிரிப்பதால் இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு வராத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இக்கூட்டதில் விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் சீர்மிகு பல்கலைக்கழகமாக மாறும்போது கல்வி சூழல் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
    Next Story
    ×