search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎல்எப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
    X
    டிஎல்எப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

    தரமணியில் ‘டி.எல்.எப்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனம்- எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

    தரமணியில் டிஎல்எப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

    இதை தொடர்ந்து 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தானது. இதே போல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி செயல்பாட்டுக்கு வரத்தொடங்கி உள்ளது.

    இதன் அடிப்படையில் தற்போது தரமணியில் மிக பிரமாண்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒருங்கே அமையும் வகையில் டி.எல்.எப். நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

    டிட்கோ மற்றும் டி.எல்.எப். நிறுவனம் இணைந்து உருவாக்க இருக்கும் இந்த தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கான “டி.எல்.எப். டவுன் டவுன்” சென்னை வளாகத்திற்கு இன்று அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு தொடர்ந்து தொழில் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்ற ஒரே ஆண்டில் 59 திட்டங்கள் தங்கள் வணிக உற்பத்தியைத் துவக்கியுள்ளன. மேலும், 213 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.

    வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குப் பிறகு, இதுவரை 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 83 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

    அம்மாவின் வழியில் செயல்படும் எனது அரசும், தமிழ்நாடு தொழில் துறையில் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

    மாதிரி வடிவங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேலும் சிறப்பாக்கும் பொருட்டு உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழர்களின் சீரிய ஆலோசனைகளை பெறவும், தமிழ்நாட்டில் தொழில் துவங்க முன்வரும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கவும், “யாதும் ஊரே” என்ற புதிய திட்டத்தை நானே நேரடியாகச் சென்று அமெரிக்காவில் துவக்கி வைத்தேன்.

    இந்தப் பயணத்தில், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளிலும், துபாயிலும் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, அதன் மூலம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதலீடுகளை ஈர்த்து 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன.

    இதனால் 35 ஆயிரத்து 520க்கு மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. மேற்படி ஒப்பந்தங்களில் 5 நிறுவனங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

    தமிழ்நாடு வணிக எளிதாக்குதல் சட்டம் மூலம் ஒற்றைச் சாளர அனுமதிகளை நேரடியாகக் கண்காணித்து விரைவுபடுத்திட, எனது தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இக்குழுவின் மூலம் இதுவரை 14 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 36 தொழில் திட்டங்களுக்கு பல்வேறு அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 763 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் விரைவில் உருவாக்கப்பட உள்ளன.

    மேலும், முதலீடு செய்வதை எளிதாக்குதல் பிரிவு, எனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு மற்றும் வானூர்தி தொழில் பூங்கா, மின்சார வாகனப் பூங்கா ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளன.

    புத்தொழில்களை ஊக்குவிக்க தனிக்கொள்கை, தகவல் தொழில் நுட்பக் கொள்கை, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் தொழில் கொள்கை என தொழில் துறை மேம்பட பல்வேறு கொள்கைகளை வகுத்து, திட்டங்களை செயல்படுத்தி அம்மாவின் அரசு வெற்றி கண்டு வருகிறது.

    குவைத் நாட்டைச் சார்ந்த அல் கராபி என்ற நிறுவனம் தூத்துக்குடியில் 49 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சுற்றுச்சூழலுக்கு உதந்த பி.எஸ்.-எஸ்.ஐ.எக்ஸ் பெட்ரோலியப் பொருட்களைத் தயாரிக்கும் ஒரு நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி தொழிற்சாலையை துவக்க உள்ளது.

    இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் ஜுராங்க் தீவு, குஜராத்தில் உள்ள ஜாம் நகர் மற்றும் தஹேஜ் போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வளர்ச்சியைப் போல, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும்.

    இது தவிர, உலகின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பி.ஒய்.டி., மாபெரும் மொபைல் போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விங்டெக் ஆகிய நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களது புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளன.

    தொழில் சிக்கல்கள் காரணமாக மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையினை வாங்கி, மின்னணு சாதன உற்பத்தியினை மேற்கொள்ள சால்காம் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.

    இந்த அரசின் நல்லாட்சிக்கு ஒரு அத்தாட்சியாக வேளாண்மை, தொழில், மனித வள மேம்பாடு, பொது சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், சமூக நல திட்டங்கள் உள்ளிட்ட பத்து துறைகளில் எடுத்துக் கொள்ளப்பட்ட ஐம்பது குறியீடுகளின் அடிப்படையில், 2019-க்கான மத்திய அரசின் நல் ஆளுமை குறியீட்டு அறிக்கையில் தமிழ்நாடு முதலாவதாக வந்து சாதனை படைத்துள்ளது.

    தமிழ்நாட்டில் அன்னிய நேரடி முதலீடு கடந்த ஆண்டுகளில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் என இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டினை அம்மாவின் அரசு கூடுதலாக ஈர்த்துள்ளது என்பதை இங்கே பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    பிராஸ்ட் அண்ட் சல்லிவன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் இரண்டாம் இடத்தை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது.

    சென்னை இன்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று கூறுகின்ற அளவிற்கு பல புதிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களுடைய கிளைகளை சென்னையில் திறந்துள்ளன. மற்ற நிறுவனங்களும் தங்கள் அலுவலகங்களை சென்னையில் தொடங்க விரும்புகின்றன.

    எனவே பல்வேறு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய தொழில் நுட்ப அலுவலகங்களை சென்னையில் அமைப்பதற்கு வசதியாக மற்றொரு பெரிய வளாகம் அமைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் டிட்கோவும், டி.எல்.எப். நிறுவனமும் கூட்டாக இணைந்து சென்னை, தரமணியில் 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான, பல்வேறு நவீன வசதிகளுடன் ஒரு வளாகத்தினை அமைக்க உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்க வாய்ப்பு உள்ளது.

    தேவைக்கு ஏற்ப இந்த தகவல் தொழில்நுட்ப வழித்தடத்தை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மெட்ரோ 2-வது திட்டம், கேளம்பாக்கம்-திருப்போரூர் இடையே பழைய மகாபலிபுரம் சாலையை விரிவுபடுத்த ரூ.1500 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    தொழில் முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி வரவேற்கும் அரசு அம்மாவின் அரசு. அவர்கள் தொழில் தொடங்க அனுமதி மற்றும் அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் குறுகிய காலத்தில் வழங்குவதும் அம்மாவின் அரசுதான்.

    இதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயரும் என்பதை உறுதிபட இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், டிட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் காகர்லா உஷா, டி.எல்.எப். நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், ஸ்ரீராம் கட்டார், டி.எல்.எப். நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மோஹித் குஜ்ரால் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×