search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதல்: புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலி

    உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் பலியாகினர்.
    உளுந்தூர்பேட்டை:

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள அம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐசக் அய்யா (வயது 54). இவர் அகில இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவராக இருந்து வருவதோடு, கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவரது மகன் ராஜன் விண்ணரசு(வயது 24), கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வந்தார்.


    இந்த நிலையில் ராஜன் விண்ணரசுக்கு நேற்று முன்தினம் தூத்துக்குடியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஐசக் அய்யா, தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் 2 கார்களில் தூத்துக்குடியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

    நேற்று அதிகாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சி திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக ஐசக் அய்யா குடும்பத்தினர் சென்ற கார் மீது உரசியபடி சென்றது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ஐசக் அய்யா குடும்பத்தினர் காரை சாலையில் நிறுத்திவிட்டு, அரசு பஸ்சுக்கும், காருக்கும் இடையே நின்றபடி பஸ் டிரைவருடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பயணிகள் சிலர் பஸ்சில் இருந்து இறங்கி அங்கு நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ், கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதியது. ஆம்னி பஸ் மோதிய வேகத்தில், அரசு பஸ் முன்னோக்கி வேகமாக நகர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதியது. அப்போது அரசு பஸ்சுக்கும், காருக்கும் இடையே நின்று கொண்டிருந்த ராஜன் விண்ணரசு மற்றும் அரசு பஸ்சில் வந்த புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி(39), அறந்தாங்கியை சேர்ந்த சண்முகநாதன் மகன் அருண்பாண்டியன்(30), காஞ்சீபுரம் மாவட்டம் களத்தூரை சேர்ந்த சற்குணம்(39) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஐசக் அய்யா, அவரது காரை ஓட்டி வந்த அரக்கோணத்தை சேர்ந்த டிரைவர் வினோத்(25), அரசு பஸ் டிரைவர் திருச்சி துறையூரை சேர்ந்த கோவிந்தராஜ்(37), கரூர் மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கண்டக்டர் சுப்பிரமணியன்(30), தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம்(29), புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடியை சேர்ந்த தினேஷ்குமார்(32) உள்ளிட்ட 22 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் எடைக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விபத்தில் பலியான 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, விபத்துக்குள்ளான வாகனங்கள் அனைத்தும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    Next Story
    ×