search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி, மு.க.ஸ்டாலின் (கோப்பு படம்)
    X
    கே.எஸ்.அழகிரி, மு.க.ஸ்டாலின் (கோப்பு படம்)

    மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது. 

    பின்னர் தனது அறிக்கை பற்றி விளக்கம் அளித்த கே.எஸ்.அழகிரி, உள்ளாட்சி தேர்தலில் கீழ்மட்ட தலைவர்களிடையே உள்ள மனக்கசப்பு பற்றி மட்டுமே கூறியதாகவும், கூட்டணியில் விரிசல் இல்லை என்றும் கூறினார். இணைந்த கரங்கள் பிரிய வாய்ப்பு இல்லை என்றும் கூறியிருந்தார். ஆனாலும், இரு கட்சிகளுக்கிடையே சுமுகமான நிலை ஏற்படவில்லை.

    இந்நிலையில், புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றார்.

    இதனைத் தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மதியம்  அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். 

    இந்த சந்திப்புக்குப் பிறகு, திமுக-காங்கிரஸ் கூட்டணி தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×