search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம்- அரசு பள்ளி ஆசிரியர் கைது

    தர்மபுரி அருகே மனைவிக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மாரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா (வயது 28) அரசு பள்ளி ஆசிரியை. இவர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அதியமான் (32) என்பவரை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த திருமணத்தின்போது ஆசிரியை சத்யாவுக்கு அவரது பெற்றோர் 32 பவுன் நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம், கார், வீட்டு உபயோக பொருட்களை சீர்வரிசையாக வழங்கினார்கள்.

    இந்த நிலையில் ஆசிரியர் அதியமானின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஆசிரியை சத்யாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    மேலும் மனைவிக்கு தெரியாமல் பந்தாரஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அதியமான் 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசிரியை சத்யா அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதியமானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மேலும் அதியமானின் உறவினர்கள் அதிபிரசாத் (29), தொப்பையன் (48), செந்தில் (52), சாந்தி (49), அரசு (26), பவித்ரா (22), குமாரி ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×