search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கோவில்பட்டியில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

    கோவில்பட்டியில் நேற்று இரவு அ.தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 10-வது தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவர் கோவில்பட்டி நகரசபை 5-வது வார்டு அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்தார்.

    இவர் நேற்று இரவு 8.15 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து சங்கரலிங்கபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். சங்கரலிங்கபுரம் காளியம்மன் கோவில் அருகில் சென்றபோது, அங்கு வந்த மர்மநபர்கள் திடீரென்று பாலமுருகனை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மர்மநபர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மெயின் ரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுதேசன் (கிழக்கு), அய்யப்பன் (மேற்கு) மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பாலமுருகனை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மல்லிகா (38) என்ற மனைவியும், சஞ்சீவி (14) என்ற மகனும், நந்தினி (9) என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×