search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரம்
    X
    கார்த்தி சிதம்பரம்

    இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை? - துரைமுருகனுக்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி

    இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு, கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சனை, மறைமுகத் தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வந்தது.

    தி.மு.க., கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேரடியாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டார். மறைமுகத் தேர்தலிலும் தி.மு.க.வை விட கூடுதல் இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

    அதாவது, மறைமுக வாக்கெடுப்பின்போது, தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டது வெளிப்படையாகவே தெரிந்தது. இது தி.மு.க. தலைமையை கோபம் கொள்ளச் செய்தது. குறிப்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதன்பின், தி.மு.க.வும், காங்கிரசும் எப்போதும் இணைந்த கரங்கள் என அழகிரி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, தி.மு.க.வின் டி.ஆர்.பாலு கூறுகையில், தி.மு.க. குறித்த அறிக்கையை கே.எஸ்.அழகிரி தவிர்த்திருக்கலாம். தலைவர்மீது வைத்த குற்றச்சாட்டாகவே நாங்கள் அதை பார்க்கிறோம். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்புமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என தெரிவித்தார்.

    இதற்கிடையே, கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிப்போனால் போகட்டும். எங்களுக்கு என்ன நஷ்டம்? என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன் ஏன் இந்த ஞானம் வரவில்லை? என துரைமுருகனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
    Next Story
    ×