search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    கருமந்துறையில் தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்க ராமதாஸ் கோரிக்கை

    சேலம் மாவட்டம் கருமந்துறையில் தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு சாதகமாக ஆயிரமாயிரம் அம்சங்கள் இருந்தாலும், அவற்றை ஆக்கப்பூர்வமான வகையில் மேம்படுத்த தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. உழவர்களின் வருவாயைப் பெருக்குவதற்கு இதுதான் பெரும் தடையாக உள்ளது.

    தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளன. தமிழகத்தில் 4 தோட்டக்கலைக் கல்லூரிகள், ஒரு முதுநிலை தோட்டக்கலை கல்வி நிறுவனம், ஒரு வனக்கல்லூரி, ஒரு பட்டு வளர்ப்புக் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    இவை தவிர பல பட்டயக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் தோட்டக்கலை சார்ந்த பட்டயப் படிப்புகளில் தொடங்கி, முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் வரை கற்பிக்கப்படுகின்றன. இவை தவிர தோட்டக்கலைக்காக 11 முழுநேர ஆராய்ச்சி நிலையங்கள், 10 பகுதி நிலை ஆராய்ச்சி நிலையங்கள், 61 தோட்டக்கலைப் பண்ணைகள், 7 தோட்டக் கலைப் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் கால்நடைப் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவை தமிழகத்தில் தான் முதலில் தொடங்கப்பட்டன.

    ஆனால், தோட்டக்கலைப் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை 35 ஆண்டுகளுக்கு முன் 1985ஆம் ஆண்டில் இமாலய பிரதேசத்திலும், 2000ஆவது ஆண்டுக்கு பிறகு ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை பெரியகுளத்தில் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என 2005ஆம் ஆண்டிலும், சேலத்தில் அமைக்கப்படும் என்று 2011ஆம் ஆண்டிலும் அறிவிக்கப்பட்ட போதிலும் அவை செயல்வடிவம் பெறவில்லை.

    அதற்கு சரியான நேரம் இப்போது வந்துள்ளது.

    நெல், தானியங்கள் போன்ற பயிர்களைப் பயிரிடுவதை விட காய்கறிகள், பழங்கள், மலர்கள் போன்ற தோட்டக்கலைப் பொருட்களை பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும். இதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தை தொடங்க அரசு முன்வர வேண்டும்.

    சேலத்தில் இரும்பாலை வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் நிலம் அல்லது சேலம் மாவட்டம் கருமந்துறை தமிழக அரசு தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை பல்கலைக்கழகத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×