
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் இன்று தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. இங்குள்ள 14 வார்டுகளில் தி.மு.க. 6-ஐயும், அ.தி.மு.க. 5-ஐயும் கைப்பற்றின. அ.ம.மு.க.-1 சுயேச்சைகள்-2 இடங்களை பிடித்தன.
இதனால் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அ.தி.மு.க. சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும், தி.மு.க. சார்பில் காளீஸ்வரி என்பவரும் களம் இறங்கினர்.
இங்கு வாக்கு எண்ணிக்கை முடிவில் 2 பேருக்கும் தலா 7 ஓட்டுகள் கிடைத்தன. இதனால் தலைவர் யார்? என்பதை தேர்ந்தெடுக்க குலுக்கல் முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.
இதனால் அங்கு குழப்பமான சூழல் ஏற்பட்டது. யார் தலைவர் என்பதை நிர்ணயிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது. ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அருப்புக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மோதலை தடுக்க முயன்றார். திடீரென யூனியன் ஆபீஸ் வந்த கும்பல் கற்களை வீசியது. இதில் அலுவலக கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அந்த கும்பல் டி.எஸ்.பி. வெங்கடேசனை அரிவாளால் வெட்டியது.
இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டது. நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.