
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கேரளா செல்லும் அணுகு சாலையில் சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி இன்ஸ்பெக்டர் வில்சனை காரில் வந்த இரண்டு பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் சுட்டு விட்டு சுலபமாக தப்பியுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
அவர்கள் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளதாகவும் தற்போது செய்தி வருகிறது.
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் என்ற தனிக்காவலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல் நமது தமிழக காவல்துறையின் மீது நடத்தப்பட்ட ஓர் வன்முறை தாக்குதலாக கருதி தமிழக அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் சுட்டுக்கொன்ற அந்த பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
2014-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் பாடி சுரேஷ்குமாரின் கொலையில் சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகளான சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் தலைமறைவாக இருப்பதோடு, தமிழகத்தில் மேலும் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு வேறு சிலருடன் தொடர்பில் இருப்பது பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறையினரால் 3 பேர் கைதின் மூலம் விளங்குகிறது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு மெத்தனம் காட்டாமல் தமிழகத்தில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை விரைந்து கண்டறிந்து அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.