search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான டேவிட்
    X
    கைதான டேவிட்

    மோசடி பணத்தில் பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை- சேலத்தில் மாற்றுத்திறனாளி கைது

    வேலை வாங்கி தருவதாக பலரிடம் இருந்து பெற்ற பணத்தில் பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை நடத்திய மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் அலி (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு நேர்முக தேர்வுக்கு சென்று விட்டு பஸ்சில் வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்று திறனாளியான டேவிட் (வயது 38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அஸ்ரப் அலியின் செல்போன் எண்களை வாங்கிய டேவிட், அஷ்ரப் அலியிடம் அடிக்கடி பேசி வந்தார். அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    அதனை நம்பிய அஸ்ரப் அலி கடந்த ஆண்டு 3 தவணையாக 4.25 லட்சத்தை டேவிட்டிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிய டேவிட் கூறிய படி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து அஸ்ரப் அலி பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. பல முறை திருப்பி கேட்டும் பணத்தை கொடுக்காததால் அஸ்ரப் அலி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டேவிட்டை கடந்த 6-ந் தேதி கைது செய்தனர்.

    பின்னர் டேவிட்டிடம் நடத்திய விசாரணையில் அவர் பரபரப்பு தகவல்களை போலீசாரிடம் கூறினார். அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

    கண் பார்வையிழந்த டேவிட் பஸ்களில் அதிக அளவில் பயணம் செய்வார். அப்போது அருகில் இருக்கும் பயணிகளிடம் நைசாக பேச்சு கொடுப்பார். கண் பார்வையற்றவர் என்பதால் பயணிகளும் அவருக்கு உதவி செய்வார்கள். அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் டேவிட் அவர்களது செல்போன் எண்களை பெற்றுக்கொள்வார்.

    பின்னர் வீட்டிற்கு சென்றதும் அவர்களை தொடர்பு கொண்டு இனிக்க, இனிக்க பேசி பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வார். அப்போது தனக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் வேலை வாங்கி கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூறுவார்.

    இதனை நம்பி பணம் கொடுப்பவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் படி கடந்த 6 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    மேலும் மோசடி பணத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பல பெண்களை திருமணம் செய்துள்ளார். இது தவிர சென்னை, பெங்களூரு, கரூர், நாமக்கல், ஈரோட்டில் 10-க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகளை வைத்து மோசடி பணத்தை அவர்களுக்கு கொடுத்து உல்லாசம் அனுபவித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை சேலம் சிறையில் அடைத்த போலீசார் அவர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×