search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலியோ சொட்டு மருந்து முகாம்
    X
    போலியோ சொட்டு மருந்து முகாம்

    விருதுநகர் மாவட்டத்தில் 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

    விருதுநகர் மாவட்டத்தில் தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 19-ந் தேதி நடைபெறும் என கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை இந்தியாவில் இருந்து ஒழிக்கும் வகையில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகளாக தீவிர முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    தற்போது 25-வது ஆண்டாக தேசிய பல்ஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

    இந்த முகாமில்­பிறந்ததில் இருந்து 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1,50,136 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 1,168 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த மையங்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள். கோவில்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    மேலும் ரெயில், பஸ் நிலையம், தியேட்டர், தங்கும் விடுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் முகாம் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இந்த முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.

    முகாமில் 4580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவர்.

    மாவட்டத்தில் 28 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் 46 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கோவில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஆகையால் பொதுமக்கள் அனைவரும் குழந்தைகளை வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச்சென்று, குழந்தைகளை போலியோ நோயில் இருந்து பாதுகாத்து ஊனம் இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என விருதுநகர் கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×