search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து (கோப்புப்படம்)
    X
    விபத்து (கோப்புப்படம்)

    வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதல்- பெண் பலி

    வெள்ளகோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தனியார் நிதிநிறுவன பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    வெள்ளகோவில்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டாம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் முத்துலட்சுமி(வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    முத்துலட்சுமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராமசாமி மகளுக்கு பல இடங்களில் வரன் தேடி வந்தார். ஆனாலும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக கோவில்களில் பரிகாரம் செய்ய ராமசாமி முடிவு செய்தார். இதற்காக சம்பவத்தன்று தனது மகளுடன் காரில் கும்பகோணம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்தனர். பின்னர் நேற்று இரவு அங்கிருந்து பொள்ளாச்சிக்கு காரில் வந்தனர்.

    இவர்களது கார் நள்ளிரவு 1 மணியளவில் கோவை- திருச்சி ரோட்டில் வெள்ளகோவில் அடுத்த ஓலாப்பாளையம் என்ற இடத்தில் வந்தது. அப்போது முன்னால் லாரி சென்றது.

    இதில் எதிர்பாராத விதமாக லாரி மீது கார் மோதியது. இதில் முத்துலட்சுமி பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கி பலத்த காயத்துடன் இருந்த முத்துலட்சுமியை காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு முத்துலட்சுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×