search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பந்த் போராட்டம் - நாம் தமிழர் கட்சியினர் 51 பேர் கைது

    புதுவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பிலும், நாம் தமிழர் கட்சி சார்பிலும் இன்று பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சி பந்த் போராட்டத்திற்கு சில சமூக இயக்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் வர்த்தக சபையினர் பண்டிகை காலம் என்பதால் வியாபாரம் பாதிக்கப்படும், எனவே பந்த் போராட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட பந்த் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் நாம் தமிழர் கட்சி அறிவித்தபடி பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

    இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. ஆனால் வழக்கம் போல பஸ்கள் இயங்கியது, கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது.

    அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியது. பெட்ரோல் பங்க், திரையரங்கு, மார்க்கெட் என அனைத்தும் வழக்கம் போல இயங்கியது. நாம் தமிழர் கட்சியினர் சுப்பையா சிலை அருகே மாநில செயலாளர் சிவக்குமார் தலைமையில் ஒன்று கூடினர். அங்கிருந்து புதுவை பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலத்தில் உலக தமிழ் கழகம், தமிழ் உலகம், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, நாம் தமிழர் நிர்வாகிகள் இளங்கோவன், திருமுருகன், ரமேஷ், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊர்வலம் பஸ் நிலையம் வந்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 51 பேர் கோரிமேடு சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×