search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    போராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    படிக்கும் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
    சிவகாசி:

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனுப்பன்குளம், பேராபட்டி, மீனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய நாட்டை அவமதிப்பு செய்யும் நாட்டில் உள்ளவர்களுக்காக ஏன் இங்கு போராட வேண்டும்.

    மோடி என்ற வீரன் கையில் நாடு உள்ளதால்தான் இந்தியா இந்தியாவாக உள்ளது. மோடி போன்ற இரும்பு மனிதர் இல்லையென்றால் வன்முறையால் இந்தியா துண்டாடப்பட்டிருக்கும். மோடியின் தலைமை இந்தியாவிற்கும் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தமிழகத்திற்கும் தேவை.

    அ.தி.மு.க. ஆதரிக்கும் அனைத்து திட்டங்களையும் தி.மு.க. எதிர்ப்பதையும் அதற்கு ஒரு காரணத்தை தெரிவிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.

    முதல்வர் ஆதரிக்கும் அனைத்து திட்டங்களையும் எதிர்பவராக மட்டுமே மு.க. ஸ்டாலின் உள்ளார், நல்ல திட்டங்களை ஆதரிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது.

    நாட்டு மக்கள் அமைதியாக வாழவேண்டும் என்ற எண்ணம் தி.மு.க.விற்கு சிறிதளவும் கிடையாது. அந்தக்காலம் முதல் மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வதுதான் தி.மு.க.வின் வழக்கமான செயல், அதைத்தான் தற்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தி.மு.க. செய்து வருகிறது. காலப்போக்கில் தி.மு.க. காணாமல் போய் விடும்.

    மாணவ சமுதாயத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறாமல் நாட்டை ஸ்தம்பிக்க வைப்பது, போராட்டத்தை தூண்டுவது போன்ற செயலில் தி.மு.க., காங்கிரஸ் ஈடுபடுவது வெட்கக்கேடான செயல். படிக்கும் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும். நாட்டுப்பற்றுள்ள யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    மோடி தற்போது நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதனை திசை திருப்பி நாட்டை துண்டாடும் வகையில் தி.மு.க., காங்கிரஸ் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது.

    ஊரையும் நாட்டையும் பிளவுபடுத்தும் தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் மக்களிடம் வாக்கு கேட்கும் தகுதியை இழந்துவிட்டது. தி.மு.க.வும் காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் போடுவதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×