search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    முத்தியால்பேட்டையில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

    முத்தியால்பேட்டையில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலைநகர் தனலட்சுமி கார்டனை சேர்ந்தவர் அகமது இப்ராகிம் (வயது 30). இவர் புதுவை சின்ன சுப்புராயபிள்ளை வீதியில் செருப்பு கடை நடத்தி வந்தார். இவர் தனது மனைவி ஜெய்னூல் அரபியா மற்றும் 2 குழந்தைகளுடன் தாய்-தந்தை மற்றும் தம்பி ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார்.

    இப்ராகிம் தனது தம்பி முகமது அக்பருடன் சேர்ந்து கடன் வாங்கி அதே பகுதியில் புதிதாக வீடு கட்டினார். ஆனால் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் இப்ராகிம் திண்டாடி வந்தார். பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு இப்ராகிமுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் இப்ராகிம் மனவேதனையில் செருப்பு கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவருக்கு மனைவி ஜெய்னூல் அரபியா ஆறுதல் கூறி வந்தார். ஆனாலும் தொடர்ந்து இப்ராகிம் விரக்தியுடன் இருந்து வந்த நிலையில் திடீரென தற்கொலை முடிவை கையில் எடுத்தார்.

    நேற்று மாலை அவர் வீட்டின் படுக்கை அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மின்விசிறியில் தனது மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை தட்டினார். மேலும் கணவரின் தம்பி முகமது அக்பருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இப்ராகிம் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அகமது இப்ராகிம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து ஜெய்னூல் அரபியா முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×