search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தொப்பூர் அருகே அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து- 7 பேர் காயம்

    தொப்பூர் அருகே அரசு பஸ் லாரி மீது மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தர்மபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி அருகே வெள்ளக்கல் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. 

    இதில் திருச்சியைச் சேர்ந்த டிரைவர் பாலன் கால் லாரி-பஸ்சின் சிதைந்த பகுதியில் மாட்டிக்கொண்டது. தர்மபுரியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 45 நிமிடம் போராடி அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பஸ்சில் வந்த மாற்று டிரைவர் மற்றும் 5 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்த விபத்து காரணமாக அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒருவழி பாதையாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×