search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அடித்து கொலை செய்யப்பட்ட சாகுல்ஹமீது பிணமாக கிடக்கும் காட்சி.
    X
    அடித்து கொலை செய்யப்பட்ட சாகுல்ஹமீது பிணமாக கிடக்கும் காட்சி.

    ஏரல் அருகே பெயிண்டர் அடித்துக்கொலை- கும்பல் வெறிச்செயல்

    ஏரல் அருகே கந்துவட்டி கொடுக்காததால் பெயிண்டரை அடித்துக்கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சாயர்புரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள திருத்தொண்டநல்லூரை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. (வயது 40). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாகுல்ஹமீது ஆழ்வார்திருநகரியை சேர்ந்த கண்ணன், சுடலையாண்டி, பிரின்ஸ், முத்துப்பாண்டி ஆகியோரிடம் கடன் வாங்கியுள்ளார். இதற்கு அவர் மாதந்தோறும் வட்டி கட்டி வந்துள்ளார். ஆனால் அவரிடம் அதிக வட்டி கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று இரவு சாகுல்ஹமீது வீட்டில் இருந்தார் அப்போது அங்கு வந்த கண்ணன் உள்ளிட்ட 4 பேர் அவரிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து சாகுல்ஹமீதை அடித்து உதைத்து தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதில் பலத்த காயமடைந்த சாகுல்ஹமீதை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏரல் இன்ஸ்பெக்டர் பட்டாணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கண்ணன், சுடலையாண்டி, பிரின்ஸ், முத்துப்பாண்டி ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    வீடு புகுந்து பெயிண்டரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×