search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன்
    X
    சென்னை பல்கலைக்கழகத்தில் கமல்ஹாசன்

    ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது - கமல்ஹாசன்

    சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

    இதற்கிடையில், இந்த சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) போலீசார் தாக்குதல் நடத்தினர். 

    ஜாமியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று முதல் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

    பல்கலைக்கழக வளாகத்தில் திரண்ட மாணவர்கள், குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராகவும், டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். 

    மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் பல்கலைக்கழகத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் ஒரு பிரிவினர் கல்லூரியை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நீடித்துவருகிறது. மாணவர்களின் போராட்டம் நீடிப்பதையொட்டி பலகலைக்கழக வளாகம் மற்றும் மெயின் வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவரும் மாணவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். 

    பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி அளிக்காததால் வாசலில் இருந்தவாறு மாணவர்களிடம் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

    கமல்ஹாசன்

    மாணவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-

    ''எனது நாடு, ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆபத்தான நிலையில் உள்ளது. ஆகையால் நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு பல்கலைக்கழகத்திற்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. 

    நான் இறக்கும்வரை, என்னை ஒரு மாணவன் என்றுதான் அழைத்துக் கொள்வேன். மாணவர்களின் பாதுகாவலனாக அவர்களின் குரலாக நான் இங்கு வந்துள்ளேன்.

     மத்திய அரசு மாணவர்களை படிக்கும் இடத்திலேயே அகதியாக்கியுள்ளது. போராடும் மாணவர்களுக்கு உணவு கொடுக்காமல் கல்லூரி உணவகங்களை பூட்டியது இந்த அரசிற்கு அவமானம். குடியுரிமை சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×