search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஈழத்தமிழர்களுக்கு அதிமுக- பா.ஜனதா துரோகம்: முக ஸ்டாலின் கண்டனம்

    குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருப்பதால் ஈழத்தமிழர்களுக்கு அதிமு.க, பாஜனதா துரோகம் செய்து விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற தலைப்பில் தனது முகநூல், ‘ட்விட்டர்’, ‘யூடியூப்’ உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.

    அதில் பேசியுள்ள விவரம் பின் வருமாறு:-

    குடியுரிமை திருத்தச் சட்டம் என்கிற புதியச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறது. இது அரசியல்சாசனத்திற்கு எதிரான, மக்கள் விரோத, மக்களைப் பேதப்படுத்தி- பிளவுபடுத்தும் பிற்போக்கான சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தி.மு.க. எதிர்த்து வாக்களித்தது.

    ஆனால், அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்து வாக்களித்தது. அதனைச் சட்டமாக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

    இந்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல்; நாடு முழுவதும் போராட்டங்கள் மக்கள் இயக்கமாகவே நடந்துகொண்டு இருக்கிறது. தி.மு.க.,வும் தமிழ்நாட்டில் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருக்கிறது.

    பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் என்று பல பிரச்சினைகளால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றத்தையும், குமுறலையும் திசைதிருப்புவதற்காகவே, இந்தச் சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

    இதில், அகதிகளாக வரும் எல்லோருக்குமே, குடியுரிமை வழங்கப்படும் என்று சொல்லி இருந்தால், நாம் எதிர்க்கப் போவதில்லை. சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களை மட்டும், புறக்கணிக்கின்ற வகையில், ஓரவஞ்சனையான, மதத் தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகிற சட்டமாக அதை பா.ஜ.க. மாற்றி உள்ளது. அதற்கு அ.தி.மு.க. பக்கபலமாக இருக்கிறது. அதனால்தான் எதிர்க்கிறோம்.

    நாம் கேட்பது; இஸ்லாமியர்களை மட்டும் ஏன் வெறுத்து புறக்கணிக்க வேண்டும்? பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் தவிர மற்ற மதத்தவரெல்லாம் வரலாம் என்கிறார்கள். அப்படியென்றால், இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறாங்க?

    இதுதான், ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க., அ.தி.மு.க. இழைக்கின்ற மாபெரும் துரோகம். அதனால்தான் தமிழர்கள் அனைவரும் இந்தச் சட்டத்தை கண்டிப்பாக எதிர்த்தாக வேண்டும் என்று சொல்கிறோம்.

    தமிழர்கள் என்றாலே மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. இதனை அ.தி.மு.க. தட்டிக் கேட்க முடியாமல், முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது. இதுதான் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!

    மத்திய அரசுக்கு தமிழர்கள் அப்படி என்னதான் துரோகம் பண்ணினார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்கிறார்கள். அப்படியென்றால் இலங்கை, அண்டை நாடு இல்லையா?

    பாஜக

    முஸ்லிம்களால் துன்புறுத்தப்படுற மற்ற மதத்தைச் சேர்ந்தவர்களைக் காப்பாற்றுவதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம் என்றால், பவுத்த சிங்களவர்களால் தமிழர்கள் கொல்லப்படுவது பற்றி ஏன் பா.ஜ.க. அரசு கவலைப்படவில்லை?

    ஈழத்தில் இருப்பவர்கள் இனத்தால் தமிழர்கள் என்றாலும், அவர்களுடைய சமய நம்பிக்கை இந்து மற்றும் சைவம்தானே! அவர்களைப் புறக்கணித்தால், இந்துத் தமிழர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று நினைப்பதாகத் தானே அர்த்தம்?

    இந்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப்பலியே ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வரவே தயங்கும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    இன்னொரு பக்கம்; சர்வதேச மனித உரிமை விதிகளுக்கு இந்தச் சட்டம் உட்பட்டதா என்பதை இந்திய உச்சநீதிமன்றம் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையமே வலியுறுத்தி இருக்கிறது.

    யார் சொன்னால் என்ன; நாங்கள் கேட்க மாட்டோம் என்கிற தொனியில் - மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழி தோண்டிப் புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுத்தி இருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. அதை அடிபிசகாமல் அடிபணிந்து ஆதரித்திருக்கிறது தமிழ் நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு.

    ஆனால், தமிழகத்திற்கும், தமிழினத்திற்கும் ஆபத்து வரும்போதெல்லாம் அதற்கு எதிராக கொதித்தெழும் தி.மு.கழகம், இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. உரிமையையும், மானத்தையும் உயிராக போற்றிய அண்ணா - கலைஞரின் வழிவந்த இந்த இயக்கமும், அதற்கு தலைமை ஏற்றிருக்கும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலினும் அப்படி இருந்து விட மாட்டான்!

    தமிழினத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும், திராணியும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன்தான், தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத் தயாராகி விட்டது திராவிட முன்னேற்றக் கழகம். எப்போதும் இனத்துகான நமது போராட்டம் தொடரும்!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×