search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாகர்கோவிலில் 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேர் கைது

    நாகர்கோவிலில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேரை கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 நம்பர் லாட்டரிச்சீட்டு எனப்படும் ஆன்லைன் லாட்டரி தமிழகத்தில் புழக்கத்துக்கு வந்துள்ளது. தடையை மீறி நடைபெறும் இந்த லாட்டரிச்சீட்டை நம்பி தொழிலாளர்கள் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகிறார்கள். இதனால் அந்த நபர் மட்டுமல்லாமல், அவரை நம்பி இருக்கும் குடும்பமும் பாதிக்கப்படுகிறது.

    விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரிச்சீட்டால் கடனாளியான அருண் என்ற நகைத் தொழிலாளி தனது மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இதைத்தொடர்ந்து 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    குறிப்பாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை படுஜோராக நடப்பதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து 3 நம்பர் லாட்டரி விற்பனையை கண்காணிக்க நாகர்கோவில் டவுன் ஏ.டிஎஸ்.பி. ஜவகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் மீனாட்சிபுரம், வடசேரி, கோட்டார், ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    வடசேரி சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டான்லி தலைமையிலான போலீசார் வெட்டூர்ணிமடம் பகுதியில் ரோந்து சுற்றியபோது சிலர் கூட்டமாக நின்று 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அங்கு நின்றவர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

    விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் ஊட்டுவாழ் மடத்தைச் சேர்ந்த விக்னேஷ் பாண்டியன் (வயது 29), கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (44), பூதப்பாண்டி வடக்கு அரசன்குழியைச் சேர்ந்த அருண் (44) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணை செய்தபோது சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டான்லியை அவர்கள் 3 பேரும் அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதன் காரணமாக கைதான 3 பேர் மீதும் தகாத வார்த்தை பேசுதல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரிச்சீட்டு விற்பனை செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    வழக்கமாக லாட்டரிச்சீட்டு விற்று கைதாகும் நபர்கள் உடனடியாக ஜாமீனில் சென்று விடுவார். விழுப்புரத்தில் 5 பேர் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக நடவடிக்கை கடுமையாகி நாகர்கோவிலில் கைதான 3 பேரும் ஜெயிலுக்கு சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து லாட்டரிச்சீட்டுகளை குமரி மாவட்டத்துக்கு வாங்கி வந்து விற்பனை செய்வதாகவும், ஆன்லைன் மூலம் நடைபெறும் 3 நம்பர் லாட்டரிச் சீட்டு விற்பனை நடைபெறுவதாகவும் பல புகார்கள் வந்துள்ளன. இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக ஏ.டி.எஸ்.பி. தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    3 நம்பர் லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபட்டு சிக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×