search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம்- மு.க.ஸ்டாலின்

    நாடாளுமன்ற தேர்தல்-இடைத்தேர்தல் பாடங்களை மனதில் வைத்து உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எப்படியாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தப்பித்து விடலாமா, அந்தப் பழியைத் தூக்கி எதிர்க்கட்சியான தி.மு.க. மீது போட்டுவிடலாமா என 2016-ம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து விதி மீறல்களில் வெட்கமின்றி ஈடுபட்டு, முறையான இட ஒதுக்கீட்டினையும் தொகுதி வரையறையையும் செய்யாமல் புறக்கணித்து, தில்லுமுல்லுகள் செய்து, தேர்தலை நடத்திடும் தெளிவோ துணிவோ இல்லாமல், உயர்நீதி மன்றத்திடமும் உச்ச நீதிமன்றத்திடமும் வரிசையாகக் குட்டுப்பட்டுக் கொண்டே இருந்தது அ.தி.மு.க. அரசு.

    ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, மக்களின் செல்வாக்கு இல்லாமலேயே ஆட்சிக்கு வந்தவர்களுக்கு மக்களை நேரடியாக சந்திக்கும் திராணி இல்லாததால், உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தனர். அதற்கு ஏதாவது இட்டுக்கட்டிக் காரணம் கற்பிக்க வேண்டுமே என்பதற்காக, தி.மு.கழகத்தின் மீது பழியைச் சுமத்தினர்.

    ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்தில், தி.மு.கழகம் என்றைக்குமே மக்களைச் சந்திக்கத் தவறியதுமில்லை, தயங்கியதுமில்லை. வெற்றி தோல்வியைக் கடந்து, தேர்தலை நாடி எதிர்கொள்கின்ற உண்மையான ஜனநாயக இயக்கம் நம் கழகம். அதுவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை உரிய காலத்தில் திறம்பட நடத்தி, உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை தி.மு.க. ஆட்சி போல பலப்படுத்திய அரசு தமிழகத்தில் வேறு கிடையாது.

    ஊராட்சிகளின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தியதும்; ஒவ்வொரு ஊராட்சியிலும் முதல் முறையாக பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதும் 1996-ம் ஆண்டு தேர்தலை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியதும்; 2006-ம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஊரகப் பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 76 சதவிகித மக்கள் வாக்களித்திட வகை செய்ததும் தி.மு.க. ஆட்சி.

    திமுக

    2006-2011-ல் கலைஞர் தலைமையிலான கழக ஆட்சிக்காலத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து மாநகராட்சிகள் முதல் ஊராட்சிகள் வரை பல்வேறு திட்டங்களை முன்னின்று நிறைவேற்றிய முத்தான வாய்ப்பையும் பெற்றிருக்கிறேன்.

    அ.தி.மு.க. அரசு எத்தனை அத்துமீறல்கள் செய்திட நினைத்தாலும், மாநில தேர்தல் ஆணையத்துடன் சூழ்ச்சிகரமான கூட்டணி அமைத்துக்கொண்டு முறைகேடுகளுக்கு வழி வகுத்தாலும், மக்களின் பேராதரவு தி.மு.கழகத்திற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமே இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் ஊராட்சிகள் எத்தகைய அவலட்சணத்தில் இருக்கின்றன என்பது ஊரறிந்த நாடறிந்த ஏடறிந்த ரகசியம்தான்.

    தி.மு.கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் மக்களை நேரடியாகச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும், தி.மு.க. மீது அவர்களுக்கு இருக்கிற கெட்டியான பற்றுதலும் மறக்க முடியாதது. தேர்தல் களத்திலும் அதுவே நிச்சயம் வெளிப்படும்.

    அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் தேர்தலை நடத்திடத் துடிக்கும் அதிகார அடிமையான அ.தி.மு.க. அரசுக்கு, தக்க பாடம் புகட்டிட தமிழ் நாட்டு மக்கள் தயாராக இருக்கிறார்கள். எத்தனை கட்டமாக தேர்தலை நடத்தினாலும், அத்தனை கட்டத்திலும், அ.தி.மு.க. அடையப் போவது தோல்வி தான்; தோல்வி தவிர வேறல்ல. மக்கள் எழுதி வைத்திருக்கும் மகத்தான இந்தத் தீர்ப்பினை, கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்தித்திட ஆக்கபூர்வமான வியூகம் வகுத்திட வேண்டும்.

    கடந்த மூன்று நாட்களாக நான் மாவட்ட கழகச் செயலாளர்களிடம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொடர்ந்து கலந்து பேசி வருகிறேன். இன்று காலை வரை, 11 மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் நமது கூட்டணிக் கட்சிகளுடன் பேசி உடன்பாடு ஏற்பட்டு, அதன் விளைவாக பட்டியலை தங்கள் மாவட்டக் கழகத்தின் மூலம் வெளியிட்டு விட்டோம் என்ற சொன்ன போது மகிழ்ச்சி அடைந்தேன்.

    மற்ற மாவட்டங்களும் தோழமைக் கட்சியினருடன் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தையினை தொடர்ந்து மேற்கொண்டு, சுமுகமான உடன்பாடு கண்டிட வேண்டும் எனக் கேட்டு கொள்கிறேன். தி.மு.க. சார்பில் போட்டியிடக்கூடிய இடங்களில், மக்கள் நலனில் மிகுந்த அக்கறையும் மேலான வெற்றிவாய்ப்பும் உள்ள, அர்ப்பணிப்பு உணர்வு நிறைந்திருக்கும் வேட்பாளர்களை களமிறக்கிட வேண்டும்.

    கழகத்தின் அடி முனையில் ஆர்வமுடன் காத்திருக்கும் தொண்டர்களையும் அர வணைத்து, தோழமைக் கட்சியினரை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு வாக்காளரின் உறுதியான நம்பிக்கையையும் பெற்றிடும் வகையில் கண்ணும் கருத்துமாக உழைத் திட்டால்தான், வெற்றி நம்கைகளுக்கு வரும்.

    நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் இனிப்பான வெற்றிப் பரிசும், இடைத் தேர்தல் களம் தந்துள்ள கசப்பான பாடமும் மறக்க முடியாதவை; மறக்கக் கூடாதவை. கடந்த கால வெற்றியாயினும் தோல்வியாயினும் அது தரும் படிப்பினைகளை நுணுக்கமாகக் கற்றறிந்து கொள்ள வேண்டும். அலட்சியம் துளியுமின்றி, அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் முழுமையாகப் பெறுவதன் மூலம்தான், நம் வெற்றியின் இலக்கை அடைந்திட முடியும்.

    சூதுமதியாளர்களாம் அதிகார அடிமைகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, உள்ளாட்சியில் நம் ஆட்சியை அமைத்திடும் போது, விரைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கான நல்லாட்சி அமையப் போகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். என்றும் நாம் மக்கள் பக்கம் நிற்போம்; எல்லா இடங்களிலும் வெற்றிக் களம் காண்போம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×