search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த் பேசியபோது எடுத்த படம்.
    X
    உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த் பேசியபோது எடுத்த படம்.

    உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - கலெக்டர் ஆனந்த்

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த அரசியல் கட்சிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஆனந்த் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 18 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 176 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 430 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 3,180 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 3,804 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதி அன்று கோட்டூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 838 வாக்குச்சாவடிகளில் 1,470 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 195 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 87 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

    இரண்டாம் கட்டமாக 30-ந் தேதி அன்று குடவாசல், கொரடாச்சேரி, நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 933 வாக்குச்சாவடிகளில் 1,710 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 235 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 89 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடக்கிறது.

    வேட்பாளர்களுக்கான அதிகபட்ச தேர்தல் செலவின வரம்பானது கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.9 ஆயிரமும், கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.34 ஆயிரமும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.85 ஆயிரமும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரமும் தேர்தல் செலவீனமாக மாநில தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலரிடம் தேர்தல் செலவின கணக்குகளை ஒப்படைத்திட வேண்டும். அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடித்து, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், உதவி கலெக்டர்கள் ஜெயபிரித்தா (திருவாரூர்), புண்ணியகோட்டி (மன்னார்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×