
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் மழை குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருக்கிறது. இதன் காரணமாக 12-ந்தேதியும் (நாளை), 13-ந் தேதியும் (நாளை மறுதினமும்) தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல் மேற்கண்ட அதே நாட்களில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று) மழைக்கு வாய்ப்பு குறைவு. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே லேசான சாரல் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.